தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் கொண்டாப்படும் இந்த திருவிழாவில் முதல் இரண்டு நாட்களில் வழக்கமாக திருவிழாக்களில் நடத்தப்படும், பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பொதுவாக விழாவின் கடைசி நாளில், வழக்கமாக கோவில் திருவிழாக்களில் கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடுவார்கள். ஆனால் மறவப்பட்டி கிராமத்தில் விழாவின் கடைசி நாளில் அந்த கிராமத்தை சேர்ந்த மாமன் மைத்துனர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோதமான நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் கடைசி நாளில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களின் மாமன் மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சேறு மற்றும் சகதியில் நனைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டனர்.
மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கி கொண்டனர். இந்த வினோதமான இந்த திருவிழாவை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.
துடைப்பத்தை சாக்கடையில் நனைத்து தாக்கிக்கொள்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் என்றும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும் நீண்டநாள் பிரிந்த வாழும் உறவுகள் திருவிழாவின் போது துடைப்பத்தால் அடித்துக்கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும் என்றும் கூறுகின்றனர்
